Tuesday, October 25, 2016

காருணியத்து இரங்கல் !

காருண்யத்து இரங்கல் என்பது இறைவன் கருணையை நினைத்து மனம் நெகிழ்ச்சி அடைவதாகும் .

google image


தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.


உடலோடு கூடிய இவ்வாழ்க்கையை  இனி நான் பொறுக்க மாட்டேன் இறைவா!  சங்கரா போற்றி!
விண்ணுலகில் உறையும் பழையோனே போற்றி!.
எங்கள் விடலையே  போற்றி!
நிகரற்ற ஒருவனே போற்றி! தேவர் தலைவனே போற்றி!
தில்லையில் நடம் புரிவோனே போற்றி!
எங்கள் தூயோனே போற்றி! போற்றி !


போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.


 ஓம் நமச்சிவாய போற்றி! பாம்பு அணிந்தவனே  உலக மாயையில் மயங்குகிறேன் .(அதை நீக்குவாயாக)
ஓம் நமச்சிவாய போற்றி! (உன் திருவடியைத் தவிர )அடியேன் சென்று அடைக்கலம் புகுதற்குரிய இடம் வேறொன்றில்லை.  ஓம் நமச்சிவாய போற்றி! அடியேனைப் புறத்தே விடாதே.
ஓம் நமச்சிவாய போற்றி! உனக்கு வெற்றி! வெற்றி !

போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே.


நிலம் , நீர், தீ,  காற்று, வானம் , இரு சுடர்களாகிய சூரியன், சந்திரன்  ஆகியவற்றை  உருவமாக உடைய இறைவனே! என்னைப் போல  பொய்யனையும்   ஆட்கொள்ளும் ஈகைக் குணம் கொண்டவனே போற்றி!
நின் திருவடிகள்  போற்றி! நாதனே போற்றி! புத்தம் புதுத் தேனைப் போன்ற  சுவையுடைய  உன் அருள் வெள்ளம் போற்றி !

கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.


எல்லாவற்றையும் கடந்து நிற்பவனே போற்றி ! என்னைக் கண் பார்த்து இரங்குக போற்றி ! உலகப்பற்றை நான் விடுவதற்கு, என் உள்ளத்தை நின் பால் அன்பு கொண்டு உருக செய்து ,ஆட்கொண்டருள வேண்டும்.
போற்றி! இந்த உடலினை  நீக்கி, விரைவாக மேல் உலகமாகிய  முக்தியினைத் தந்தருள்வாயாக  போற்றி! சடையுள் கங்கையை ஏற்றுக் கொண்ட சங்கரா  போற்றி !போற்றி!

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.


சங்கரா போற்றி ! வேறோர் புகலிடம் எனக்கில்லையே  போற்றி! சீறுகிற  
பாம்பின் அழகானப் படம் போன்ற அல்குலையும், சிவந்த இதழையும்,மிகவும் வெண்மையான பற்களையும், வாளை ஒத்த கரிய கூர்மையான  கண்களையும் உடைய மங்கையான உமையை ஒரு பாகத்தில் வைத்துள்ளவனே  போற்றி! பெரிய இடபத்தை  ஊர்தியாகக் கொண்டவனே போற்றி! இப்பொய் வாழ்கையை என்னால்   பொறுக்க முடியவில்லையே! இவ்வாழ்க்கையை நான் வெறுக்கிறேனே! (ஆகவே என்னை விரைந்து அழைத்துக் கொள்வாயாக!)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம்பி ரானே.


என்னை நானே இழிவு படுத்திக் கொண்டேன், எம்பெருமானேபோற்றி.
அதற்கு உன்னை நான் குறை கூறவில்லை.என்னை ஆண்டு கொண்ட உன் திருவடிகள் போற்றி! சிறியவர் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பது  பெரியவரது  கடமையாகும் , இறைவா போற்றி! ஆதலால் என் வாழ்க்கையை  ஒழித்தருள்வாய்,  மேலுலகத்தையுடைய  எம்பிரானே! போற்றி !

எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.


எம்பிரான் போற்றி! வானவர்களாகிய தேவர்களுக்கு  ஆண் சிங்கம் போன்றவனே  போற்றி!  பூந்கொம்பு போன்ற இடையுடைய உமா தேவியை  ஒரு பாகத்தில்  கொண்டவனும்  திருவெண்ணீற்றை  அணிந்தவனுமே , போற்றி! செந்நிற மேனி கொண்டவனே போற்றி ! தில்லையின் பொன்னம்பலத்தில்  திகழ்பவனே  போற்றி ! மேன்மை பொருந்திய முக்தி உலகத்தை உடையவனே  போற்றி! என்னை ஆண்டு கொள்பவனே போற்றி!

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.


தனி முதல்வனே போற்றி! யாருக்கும் நிகரில்லா என் அப்பனே போற்றி! தேவர்களுக்கெல்லாம் குருவானவனே போற்றி! எங்களுடைய  அழகிய  சோதியே  போற்றி ! 'என்னிடம் வருவாயாக' என்று என்னை உன்னிடம்  அழைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . துனையில்லாதவனாகிய  என்னுடைய  தனிமையை நீக்கி, உன்னுடைய திருவடித்  துணையைத்  தருவாயாக போற்றி!

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி
பேர்ந்துஎன் பொய்ம்மை ஆட்கொண் டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.


முதிர்ந்த அன்புடைய  அடியாரிடத்தே,  அவரகளைக்  காட்டிலும்  மிகுந்த அன்புடையவனே போற்றி !  என் பொய்மை நீங்க, என்னை ஆட்கொண்டருளும் நின் பெருந்தன்மைக்குப் போற்றி.  பாற்கடலில் விரவி நின்ற நஞ்சை  உண்டு,  தேவர்களுக்கு  அமுதத்தைக்  கொடுத்த வள்ளலே போற்றி ! எங்கும் நிறைந்த உன் திருவடியை, நாயின் தன்மையுடைய  சிறியேனுக்கு  அருளிட வேண்டும் போற்றி!

போற்றிஇப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவு யிர்க்கும் ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.


இந்நிலம், நீர், நெருப்பு,காற்று ,மற்றும் விண்ணும் ஆனாய் போற்றி! பிறப்பில்லாதவனான நீ எவ்வகை உயிரும் தோன்றுவதற்கும் காரணமானவனே போற்றி! முடிவில்லாதவனான நீ எல்லா உயிர்களும் வந்து ஒடுங்கும் இடமானாய் போற்றி ! ஐம்புலன்களும் உன்னைப்  பற்றாத  நிலையுடையவனே போற்றி!

                                                      
   திருச்சிற்றம்பலம் !

Sunday, October 23, 2016

அiனு போக சுத்தி!

அனுபோக  சுத்தி என்பது சிவானுபவத்தால்  ஆன்மா தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளுதல்.

google image


ஈசனேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.


ஈசனே ! என் தலைவனே! என் தந்தையுமாகிய பெருமானே! என் பிறவியை ஒழிப்பவனே! ஒரு சிறு பொருளுக்கும் நான் ஈடாக மாட்டேன். தீய நாயினைப் போன்ற இழிவுடையவனான நான் , உன்னை குறித்து நினைக்காதவனாயிருக்கிறேன்.
ஒளியுருவானவனே! திருவம்பலவாணனே! என்னுடைய நிலையை மாற்றி, உன் மேல் பக்தியுள்ளவனாய்  மாறுவதற்கு  என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றேன்.


செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யில்லா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.


போர் செய்வதில் வல்லமையுடைய  ஆண் சிங்கத்தைப் போன்றவனே! பொய்யற்ற உண்மை அடியார்கள் , மணம் நிறைந்த தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை  அடைவதை, பொய்யுடையவனான நான்  கண்ணாரக் கண்டும்,  காதாரக் கேட்டும்,  இந்தப் பொய்யுலகத்தில் உண்டு உடுத்திருப்பதையே  பெரிதாக நினைத்துக் கொண்டிருந்து விட்டேன். ஆதலால் நாய் போன்ற கீழ்மையுடையவனான  நான் செய்வதறியாது திகைக்கின்றேன்.  செம்பொன் போன்ற உன் திருவடிகளைக்  காணாத  பொய்யர்கள் , அடையப் போகிற துன்பங்கள் அனைத்தையும் நானும் அடையப் போகிறேன் என்று எனக்குப் புரிகிறது.

போரே றேநின் பொன்நகர்வாய் நீபோந் தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே.


போர்  செய்வதில் வல்லமைப் பெற்ற ஆண் சிங்கம் போன்றவனே! உனது அழகிய சிவபுரத்தினின்று , இளமையும், மென்மையுமுள்ள தனங்களுயுடைய  உமாதேவியோடு  நீ எழுந்தருளி , அஞ்ஞான இருளை நீங்கி அருள செய்யவும், திருவருள் பெற்ற உன் சிறப்பு மிகுந்த அடியார்கள் உன் திருவடிகளை அடைவதை நான் நேரே பார்த்திருந்தேன். அப்படிப் பார்த்திருந்தும், உன் திருவடிகளை அடையாமல் , கண்ணையிழந்த ஊர்க்  காளைப் போல்  இவ்வுலகில் திரிந்துக் கொண்டிருக்கின்றேனே ! தீயவனான என் உயிர் போகுமா என்றால் அதுவும் நீங்கவில்லையே!

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே.


எம்பெருமானே! உன்னைக் காணும் பொருட்டு , மாமுனிவர்கள்  பலர் இவ்வுலகில் அளவிறந்த காலம் தவத்தை மேற்கொண்டு , உடம்பை ஒரு பொருட்டாக போற்றாது வெறுத்து, வருந்தி நிற்க , அவர்களை எல்லாம்  விட்டு விட்டுப்  பாவியாகிய என்னை  ஆட்கொண்டாயே! ( ஆட்கொண்ட பின் இவ்வுலகிலேயே விட்டு விட்டுப் போய் விட்டாயே)  மாணிக்கமே! உன்னைக் காணும் பொருட்டு ,  மாசு நிறைந்த என்னுடைய பெரிய உடலை  நான் மாய்த்துக் கொள்ளவுமில்லை.அது மட்டுமல்லாமல் உன்னைத் தேடி அலையும்  அன்பும் இல்லாதவனாயிருக்கிறேன். இனி நான் எந்நெறியைக் கொண்டு உயர்வேனோ!

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.


மான் போன்ற பார்வையுடையவளாகிய  உமாதேவியை  இடபாகத்தில்  கொண்டவனே!இவ்வுலகிலே
  வந்து என்னைஆட்கொண்டு அருளினாயே !
தேன் போன்றவனே! அமுதமே! கரும்பின் சுவை போன்றவனே! சிவனே! தெற்கேயுள்ள தில்லை நகர்க்கு இறைவனே! முதல்வனே!  உந்தன் திருவடிப்பாங்கினை  உணர்ந்தோர் எல்லாம் உன் திருவடியை வந்து சேர்ந்தனரே !நானோ,மாமிசம் பொருந்திய, புழு நிறைந்த கூடாகிய இவ்வுடம்பைப்  பாதுகாத்து இவ்வுலகிலேயே இருந்து விட்டேனே!

உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.

 
 முதல்வனே! உன்னையே நினைத்து , மனம் உருகுகின்ற  பேரன்புடைய  அடியார்கள் , எல்லாவற்றையும் உடைய நின் திருவடியை  சேர்வதை  நான் பார்த்தேன்.  நானோ, ஊரில் ஆதரவின்றி அலையும் நாயை விடக் கீழ்மையானவன். அதோடு இல்லாமல்,உன்னை நினைத்து
மனம் உருகாதவனும், கல்லை ஒத்த மனத்தையுடையவனும், மற்றும் உன்னை நினைத்து கசிந்து கண்ணீரும் விடாதவன். ஆகையால் புலால் நாற்றம் வீசும் , புழு நிறைந்த கூடாகிய இவ்வுடம்பைப் பாதுகாத்துக்  கொண்டு ,  இவ்வுலகிலேயே  நான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்து விட்டாயே!

முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப்
பிடித்த வாறும் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே.


 பெருங்காதலுடைய உன் அடியாரை தளர விடாமல் ,நீ முதலில் பிடித்து அழைத்துக் கொண்டதும் , என்னை இங்கேயே காத்திருக்க வைக்க நீ செய்த முடிவும் சரியானதே. ஏனென்றால் எனக்கு பெண்ணாசை இன்னும் நீங்கினபாடில்லை. ஒரு பெண் இதழ் துடிப்பதும், அவள் ஆடை சற்றே   நழுவுவதும் , அவளுக்கு முகத்தில் சிறிதே வியர்வை அரும்புவதும் , ஆகியன எல்லாம் என் பொருட்டே நிகழ்ந்தது என்று நினைத்து எனக்கு நானே கேடு விளைவித்துக் கொண்டேன்.

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை யுருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே அருளலாந் தன்மை யாமென் றன்மையே.



தேனை, பாலை, கரும்பின் சுவையை, ஒளிப்பிழம்பை,மனம் தெளிந்தவரது ஊனையும்  உருகச் செய்யும்  முதல்வனை,  சிவபுரத்து அரசனை   நோக்கி, வீணனாகிய நான், உன் அடியவன் என்றும், என்னை நீ ஆண்டு கொண்டாய் என்றும்  சொல்வது நகைப்புக்குரியதாகும் . உன் அருளுக்கு பாத்திரமாகும் தகுதி எனக்கில்லையாயினும் , நீ கருணைக் கொண்டு அருள் செய்வாய் .

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.


யாராலும் அறியமுடியாது தன்மையை உடைய தலைவனே!  தீய
நாய் போன்ற என்னை ஆண்டு கொண்டு,பிறகு புறத்தே செல்ல விடுவாயோ? நீயே என்னை   புறம் போகச் செய்தால் என்னை யார் பார்த்துக் கொள்வார்? நான் என்ன செய்வேன்? எம்பெருமானே! பொன்னைப் போல்
விளங்கும் திருமேனி கொண்ட எந்தையே!  நான் எங்கு அடைக்கலம் புகுவேன்?

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீஆண்டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.


என் தந்தையே !  வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய நான் , என்னை நீ ,ஆண்டு கொண்ட நாளில் உன்னை வணங்கும் அடியார் நடுவில் நின்று , உன் திருத் தோள்களின் அழகைக் கண்டு மகிழ்ந்ததைத் தவிர  வேறொன்றும் செய்திலேன்.உன்னைக் காண்பதற்கு  உள்ளம் உருகுகின்ற அன்பெல்லாம்  எனக்கில்லை. ஆதலால் நீ என்னை ஆண்டு கொள்ள நான் தகுதியுடையவனோ? ஆயினும் என்னை நீ ஆண்டு கொண்டாயே!  அந்தோ!என்னுடைய  தன்மையை  என்னால் பொறுக்க முடியவில்லையே!
உன் திருவடி என்னுடையதே ! நான் அதை சேர்வேனே!

                                                  திருச்சிற்றம்பலம் !


Thursday, October 13, 2016

கைம்மாறு கொடுத்தல் !

கைம்மாறு கொடுத்தல் என்பது ஒருவர் செய்த உதவிக்கு பிரதியுபகாரம் செய்வதாகும்.

google image



இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.



தேவர்களுக்கெல்லாம்  தலைவனே! நானோ இரண்டு கைகளையுடைய யானையைப் போன்றவன். ( யானைக்குத் கையிருந்தாலும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிற கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்.). என் மனதிற்குள் இருக்கும் மூலப் பொருளாகிய  உன்னை (இறைவனை) நான் பார்க்காமல், வெறும் துன்பத்திலேயே  உழன்றுக் கொண்டிருந்தேன். நான் இப்படியிருந்தாலும்  என்னை 'சிவலோகத்திற்கு போகலாம் வா' என்று கட்டளையிட்டாய்.  அந்த அற்புத வாய்ப்பை இழந்து விட்டு இந்த உலக போகங்களிலேயே  சூழன்றுக் கொண்டிருக்கிறேனே !

உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி என்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.


அறிவொளியான பரம்பொருள் உண்டென்று  உணர்ந்து   கொண்டவர்களே, நீ ஆணா, பெண்ணா , அலியா என்று அறியாமல்   இருக்கிறார்கள்.  நீ யார் என்பதை அவர்களுக்கே  இன்னும்   தெரியப்படுத்தாமல் இருக்கிறாய்.  ஆனால், பரம்பொருளை பற்றி எதுவும் அறிந்திராத அடியேனுக்கு, உள்ளபடியே வந்து காட்சி தந்தாய்.  உன் திருவடிக் காட்சி கிடைத்தும்,  உன் அருளை அனுபவிக்கும் பாக்கியத்தை  நழுவ விட்டு விட்டேனே. இது என் கண்  செய்த மாயமேயன்றி வேறொன்றுமில்லை.

மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேஎனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோங்
கால மேஉனை என்றுகொல் காண்பதே.


மேலுலகத்திலுள்ள  வானவர்களும்  அறிந்து  கொள்ள முடியாதத்  திருவுருவனே!  மிக்கத் தாழ்மையுடைய , எளியேனை ஆட்கொண்ட  கூத்தனே! விண்ணும், மண்ணும் தோன்றுவதற்கும்,  மறைவதற்குமுரிய  காலத்தை தீர்மானிக்கும்  காலத்தத்துவமே!.
உன்னை மீண்டும் நான் காண்பது தான் எப்போது?


காண லாம்பர மேகட் கிறந்ததோர்
வாணி லாப்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே.


அன்பர்களின் (ஞானக்) கண்ணிற்குத்  தென்படும்  பரம் பொருளே! ஆனால் அவர்களின்  (ஊணக் )  கன் பார்வையைக் கடந்தாகிய பேரொளி நிலைத்தவனே! ( அடி, முடிக் காணக் கிடைக்காதக் கதை நினைவுக் கூறல் வேண்டும்). வீணனாகிய நான்  ஐம்புலன்களால்  உணரக் கூடிய இன்பங்களை முக்கியமாகக் கருதி இவ்வுலகிலேயே இருக்கின்றேன்.
வளர்ச்சியுற்றப் பறவைக் குஞ்சு முட்டையை விட்டு சரியான நேரத்தில்  வெளியே வருவது போல் , நானும், இப்பொய்யுடம்பை விட்டு விட்டு மெய்யாகிய உன்னையடைய வேண்டும். அந்நெறியை நான் அறியவில்லையே!

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
னாற்றல் மிக்கஅன் பால்அழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாள்உறுங்
கூற்ற மன்னதொர் கொள்கைஎன் கொள்கையே.


 உன்னைப்  போற்றியும், நிலத்தில் விழுந்துப் புரண்டும், உன்னைப்புகழ்ந்து பாடியும்,  நின் தொண்டில் நிலைத்து நின்று , ஆற்றல் மிகுந்த பேரன்பால் உன்னை  கூப்பிடும் ஆற்றல்  இல்லாதவனாயிருக்கிறேன். ஆனால், எனது கொள்கையானது  எப்படி இருக்கிறது என்றால், உன்னை எதிர்த்து வந்து
இறுதியில் உன் தாமரைப் போன்ற  தாள்களை  அடைந்த எமனின் கொள்கை தான் என்னுடையதும் ஆகும்.( மார்க்கண்டேயனின்  கதை நினைவில் கொள்க )

கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.


தேனும், வண்டும்  நீங்காத கொன்றை மலர்களை அணிந்தவனும் , எள்ளும் எண்ணெயும் இருப்பது போல் எல்லாப் பொருள்களிலும், நடுவிலும், கீழேயும் , மேலேயும் ,  நிறைந்திருக்கின்றான் என் அப்பனாகிய இறைவன் . அவன் மேல் அன்பில்லாதவனாய் நான் இருக்கின்றேன். ஆனால், என்னையும்  அவனுடைய  தொண்டருக்கு  இணையாக  நினைத்து, என்னை வலிய அழைத்து  அவனுடைய அடிமையாக  ஆக்கிக் கொள்ளும் திறனுடையவன் என் இறைவன்.

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்குந்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.


எனக்குத் தந்தையும், தாயும், தலைவனாய்  இருப்பது போல் எல்லோருக்கும், தந்தையும், தாயும், தலைவனுமாய் இருக்கின்றான் என் இறைவன். ஆனால் அவனுக்குத் தந்தை, தாய், தலைவன் என்று யாருமில்லை. எல்லோரும் மனதால் அறிவதற்கு அருமையாகிய பேரானந்த செல்வத்தைத் தன்னகத்தே உடையவன், தானே முற்பட்டு, என் மனதுள் புகுந்துஅருளினான்.

செல்வ நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.


செல்வம், வறுமை என்கிற நிலை வேறுபாடுகள் இல்லாமல், தேவர், புழு, புல் என்று பிறப்பு வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் அறிவதற்கு  அருமையானவன் பரம்பொருளாகிய இறைவன்.  அப்படிப்பட்ட இறைவனின்  எல்லையில்லாத மேன்மையுடைய  திருவடிகளைக் கண்ட பின்பும், திருவடிகளை அடையாமல் பிரிந்து விட்டேனே.  அப்படிப்பட்ட கல் போன்ற மனதை கொண்டவனாய் நான் இருப்பது துன்பமே!

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.


இடப வாகனத்தையுடைய நீ, என் பாசங்களை அழித்து, என்னை அடிமைக் கொண்டாய்.  சிவம், சக்தி இவைகளைப் பற்றியும்  ஒன்றும் அறியாதவான் நான் . ஆனால், திருநீறணிந்த உன் அடியாரோடு  அடியாராய் என்னையும்  சேர்த்து,  இடம்  அகன்றதாய் இருக்கின்ற உன் திருல்லோக்க மண்டபத்தில்
 ஏறச் செய்தாயே!

(எட்டும், இரண்டும் விளக்கம்: எண் எட்டு தமிழில் ' அ" . இரண்டு 'உ'.
அகரம் -சிவம், உகரம் - சக்தி.)

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண்ட டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.


 முற்றறிவுடையவனே ! அமிர்தமே ! அன்றொரு  நாள் என்னை நீ ஆட்கொண்டாயே! நாயைப் போன்ற அடிமையாகிய நான் உன் உபதேசத்தைக் கேட்பேன்  என்று தானே என்னை ஆட்கொண்டாய். ஆனால் நீ  அப்போது கண்டது என் அறிவில்லாமையைத் தானே  .  உன் உபதேசத்தை கேட்டு நான் உன்னையடைந்தால் அது உன் அருளால் தான். உன்னையடையும் வழியை நான் உணராமல் போனாலும், அதுவும் உன் அருளே!

                                            திருச்சிற்றம்பலம்!